சிந்து நதிக்கரையோரம் வந்து தமிழ் பாடு
சங்கத்தமிழ் எங்கள் தமிழ் என்று நீயும் பாடு
செந்தமிழின் சொல்லெடுத்து செந்தமிழைப் பாடு
வங்கக்கடல் விளைந்த தமிழ் என்று நீயும் பாடு
அன்பதனை எமக்கூட்டும் அன்னைத்தமிழ் பாடு
அமுதமதும் தோற்று விடும் பைந்தமிழைப் பாடு
வீரமதை ஊட்டி விடும் விந்தைத்தமிழ் பாடு
வித்தைதனை கற்றுத்தரும் வீரத்தமிழ் பாடு
மண்டியிட்டு வாழ்ந்திடாது மன்னு தமிழ் பாடு
மானமதை பெரிதென்ற மானத்தமிழ் பாடு
தஞ்சமென்று வருபவரை தாங்கும் தமிழ் பாடு
அஞ்சிடாதே என்றுரைக்கும் விஞ்சு தமிழ் பாடு
அந்நியர்கள் நாவினிலும் கொஞ்சும் தமிழ் பாடு
ஆட்சி செய்யும் என்றும் என்றும் எங்கள் தமிழ் பாடு
மும்மையிலும் வாழ்ந்திருக்கும் மூத்த தமிழ் பாடு
மூவுலகும் வாழ்ந்திருக்கும் முத்துத்தமிழ் பாடு
வாழ்க்கைக்கல்வி எமக்குரைத்த வையத்தமிழ் வாழி
வாழும் வகை வகுத்துரைத்த வஞ்சித்தமிழ் வாழி
எந்த மொழி வந்த போதும் நின்று நிற்கும் பாரு
எங்கள் மொழி எங்கள் மொழி வாழும் மொழி பாரு
(இ.பிரியதர்சினி)